இவ்விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

Published Date: November 18, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, நவ.18: மதுரை மடீட்சியா கூட்டரங்கில் கூட்டுறவுத் துறையின் சார்பாக நடைபெற்ற 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பாக பயனாளிகளுக்கு ரூ.56,49,199/- மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கிச் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

கூட்டுறவுத்துறை என்பது பொருளாதாரத்தில் பின்தங்கிய சாமானிய மக்களின் வளர்ச்சிக்காக லாப நோக்கமில்லாமல் செயல்படும் முக்கிய துறையாக விளங்குகின்றது.  கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு கடன் உதவி வழங்கல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  தற்போதைய சூழ்நிலையில் முழுமையான கணினி மயமாக்கல் இல்லாமல் வங்கிகளை இயங்குவது சவாலான காரியமாகும்.  அந்த வகையில் கூட்டுறவுத் துறையில் கணினி பயன்பாட்டை அதிகரித்தல்  போன்ற பணிகளை மேற்கொள்வது அவசியமாகின்றது.  கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் புகார் ஏதும் எழாத வகையில் முறையே செயலாற்றிட வேண்டும் என மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

இதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங்,  மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன்,  எம்.பூமிநாதன்,  மாவட்ட ஊராட்சித்தலைவர்  சூரியகலா,  மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன்,  இணைப்பதிவாளர் குருமூர்த்தி,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஜீவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Media: Tamil Sudar